செங்குமரி என்னும் காயகற்பம்- செங்கற்றாழை

கற்றாழையானது வெப்பம் நிறைந்த, நீர்வளம் குறைந்த பகுதிகளில் வளர கூடியது. நம்மில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் நில பரப்பில், நம் அருகில் வளர கூடியதாகும். இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும். கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன.

இயற்கை நமக்கு அருளிய எண்ணற்ற கொடைகளில் மூலிகைகளும் ஒன்று. குறைந்த நீரில் அதிகமாக வளர கூடிய கற்றாழை.

கற்றாழையின் வகைகள்

  • சோற்றுக் கற்றாழை
  • சிறு கற்றாழை
  • பெரும் கற்றாழை
  • பேய் கற்றாழை
  • கருங்கற்றாழை
  • சிவப்புக் கற்றாழை
  • இரயில் கற்றாழை

செங்கற்றாழை கற்பம்

கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் 
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி 
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும் 
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா 
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும் 
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை 
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே

                                                                      நந்தீசர் – ஞானம்

இதன் பொருள்  சென்குமரியினை உட்கொள்ளும் போது நமது  நமது உடலானது பல பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். உடலில் இருந்து வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும். சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று “குண்டலினி” யோகம் சித்திக்கும்.

சிவப்புக் கற்றாழையின் தோற்றம்

செங்குமரி இதனை குமரி என்று அழைக்க காரணம் என்றும் இளமை தரவல்லது. செங்கற்றாழையில் இருந்து சித்தர்கள் காயகற்பம் என்னும் அருமருந்தினை தயாரித்தனர். இதன் மடல்கள் பசுமை கலந்த செம்மை நிறத்தில்  நல்ல சதைபற்றுடன்  இருக்கும். மடல்களில் மிகச் சிறிய வெள்ளைப் புள்ளிகளும்,  ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் காணப்படும். அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து,  நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல இருக்கும்.

சிவப்புக் கற்றாழையை உட்கொள்ளும் முறை

முதலில்  மேலே உள்ள தோல் பகுதியினை சீவி விட்டு வெறும் சதைப் பகுதியை மட்டும் எடுத்து ஏழு முறை நீரில் நன்கு அலசி விட்டு, பின் அதனை திரிகடுக (சுக்கு, மிளகு, திப்பிலி)  தூளில் பிரட்டி மென்று உண்ண வேண்டும். காலை, மாலை 48 நாள் உண்டு வந்தால் தீராத நோய் தீரும். குழந்தையின்மைக்கு இது ஒரு சிறந்த உபாயம்.ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம்.

Tag: red-aloe-vera, aloe vera, senkatralai, katralai